இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய என் தீபாவளிப் பதிவு இங்கே.
பல காரணங்களால் நான் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கொண்டாடுவதில்லை. சோம்பேறித்தனம் மிக முக்கியமான ஒரு காரணம். இன்று காலையில், நம் குழந்தைக்கு எப்படி இந்தப் பண்டிகையைப் பற்றி தெரியவரும் என்று பாலனிடம் நான் கேட்டபோது, ஒருமுறை தீபாவளியன்று ஊருக்குக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று பதில் வந்தும் எனக்கு விளங்கவில்லை, ஏனெனில், ஊருக்குப் போனால் மட்டும் குழந்தைக்கு எப்படிப் புரியும்? தீபாவளி என்பது குடும்பத்துக்குள் கொண்டாட வேண்டும். ஊருக்குப் போய் என்னத்தைக் காட்ட முடியும் என்று எனக்குக் குழப்பம். மேலும், இப்பொழுதெல்லாம் ஊரில் கொஞ்சம் மாறியிருக்கலாம். “ஊருக்குக் கூட்டிட்டுப் போய் நம் வீட்டில் நாம் கொண்டாடிக் காட்ட வேண்டும்” என்று சொன்னபோதுதான் நாம்தான் அதை செய்யவேண்டுமென்றே எனக்கு விளங்கியது. யாராவது செய்தால் பார்த்து மட்டுமே பழக்கம். இருபது வருடங்களுக்கு மேலாய் அதுவுமில்லை. நேற்று தம்பி எனக்குத் தொலைபேசி தீபாவளி நல் வாழ்த்துக்கள் என்ற போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம், இதுக்கெல்லாம் ஏன் இவன் இப்படி குசியாயிருக்கான்னு. அவனுக்கு பட்டாசு வெடிக்கிறதுன்னா ரெம்பப் பிடிக்கும். மேலே நான் கொடுத்திருக்கிற பதிவிலேயே தெரியும் அது. கல்யாணமாகி மூணாவது தீபாவளி கொண்டாடுறான் இன்னைக்கு, இப்பவும் அதேதான் சொல்றான், “பட்டாசு வெடிக்கப் போறேன்”னு! அதே உற்சாகத்தோட.
எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.